8/6/09

மிதக்கும் வலி…



இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.






7/6/09

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)


மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..





ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் ...? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன...? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்


மணி.செந்தில்


கும்பகோணம்

7/3/09

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து...மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே....எப்படி மதிக்கும்...?...எல்லாம் முடிந்த பின்னர்...என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்... பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே... அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்

5/30/09

ஈழத் தமிழர்களும் … இலக்கியப் புடுங்கிகளும்..


புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல். அந்த சொல் அலட்சியத்தினையும்,கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்கப் பயன்படும் ஒரு சொல்..கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும் போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு ,அரங்க கூட்ட அரசியல் செய்துக் கொண்டு..இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு ..எந்த அவலத்தின் மீதும் …துயரத்தின் மீது கரிசனப் பார்வை கூட செலுத்தாமல்..சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபம் தான் என்னளவில் சரியாகப் பட்டது.


ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.


ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த சமயத்தில் இன உணர்வால் போராடி முயன்றுக் கொண்டிருக்கிற …மிகச் சில எழுத்தாள ஆளுமைகள் இதற்கு வியப்பான..விதிவிலக்குகள்..

இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளன் போராடும் போது…அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும்..தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுத துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம்..இலக்கியத்திற்காகவே..தமக்காகவே….பிழைப்பிற்காகவே..சோத்திற்காகவே…சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு..ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை..தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள் ..புத்தக விழாக்களுக்காகவும்..நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர்.பின் நவீனத்துவ,முன் நவீனத்துவ..பக்க நவீனத்துவ..துக்க நவீனத்துவ.. என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய்..நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது.. மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில்..அடித்த போதையில்.. அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர்..தவித்த வாய்களுக்கு… தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள்…தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் …ஏன்..எதற்கு..எப்படி என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா…ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது.மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு ,எங்கேயாவது மாமிசம் விழுமா..பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள்… மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன.. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும்..வழுக்கவும்.. இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு …காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள்..இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை ..கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கி பிழிவார்கள்.. அலாவுதீனின் அற்புத பூதம் போல..இது வரை எங்கிருந்தார்களோ.. தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக் காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி…புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல்..அவர்களின் துயர் துடைக்க..தோள் கொடுக்காமல்..சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி..பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இனம் அழியும் போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி ,குழு சண்டை..குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை… இதில் வாய் திறக்கலாமா..வாய் திறந்தால் கட்சியின் ஈ உள்ளே போய் விடுமே… கட்டுப்பாட்டு நாற்றம் வெளியேறி விடுமே என்ற பயம்.

இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.

எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..


வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது.. ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார். உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.

உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..
எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே..

குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து.. குடிப்பதையும்.. குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…

ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…

அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.

காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே.. வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்… தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்.. பட்டங்களை பறிக்கவும்.. எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஆனால் எதற்கும் உண்டு விடியல்.

விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.

நீங்களும்..உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..

சீக்கிரம் கடந்து போங்கள்.

இல்லையேல் கடத்தப் படுவீர்கள்.

.மணி.செந்தில்...
www.manisenthil.com