3/16/11

63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும்.


காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான்.

.

சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம்.

.

தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..?

மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே…

.

இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும்.

.

பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம்.

.

நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம்.

2/27/11

ஏனெனில்…. அது அவர்களது மரபியல் குணம். – மணி.செந்தில்


“சிற்றில் நல் தூண் பற்றி,’நின் மகன்

யாண்டு உளனோ?’ என வினவுதி ; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல,

ஈன்ற வயிறோ இதுவோ;

தோன்றுவன் மாதோ,போர்க்களத்தானே.

– திணை: வாகை துறை: ஏறான் முல்லை.

பொருள்: “ சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றிய வண்ணம் ‘உன் மகன் எங்கு உள்ளானோ?’ என வினவுகிறாய்.என் மகன் எங்கிருப்பான் என நானறியேன்; புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனை பெற்ற வயிறு இதுவேயாகும் . அவன் போர் நிகழும் களத்தில் தோன்றுமியல்புடையவன் ( அவனை காண்பதற்கு அங்குச் செல் ) – புற நானூறு –நியூ செஞ்சுரி வெளியீடு .

.

ஒரு காட்சி.

வல்லாதிக்க கழுகுகள் ஒரு சேர ஒன்று சேர்ந்து கொத்தி குதறிப் போட்ட தாய் நிலத்தில் இருந்து மிஞ்சியது,தங்கியதை அள்ளிக் கொண்டு நடந்து முடிந்த பேரவலத்தின் துயர் சாட்சிகளாய் எதிர்காலம் என்னும் அடர் இருட்டின் மீது கவிழ்ந்துள்ள பேரச்சத்தினை சுமந்த வண்ணம் தயங்கி..தயங்கிப் படியே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளிவந்த மக்கள் திரளிலிருந்த அந்த வயதான முதியவரும், அவர் தள்ளிக் கொண்டு வந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நோயுற்ற அந்த பெண்மணியும்.. ஊரெல்லாம் ஆயுத பிச்சை எடுத்து, உலக சதிகள் பல செய்து பெற்ற வெற்றி தந்த கர்வமும், கண்டிப்பும் நிறைந்த அந்த காவலாளியிடம் சலனமற்ற முகத்தோடு அஞ்சாமல், மறைக்காமல் சொன்னார்கள்..”நாங்கள் தான் வேலுப்பிள்ளை,பார்வதி அம்மாள் – பிரபாகரனின் தாய் தந்தையர்.” ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

ஒரு மகத்தான விடுதலைப் போர் ஒரு சேர சேர்ந்த வல்லாதிக்க பலத்தால் முறியடிக்கப்பட்ட துயரைத் தவிர அவர்களுக்கு எவ்விதமான அச்சமும், தயக்கமும் இல்லை. கடுமையான இரத்த அழுத்தம், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு போன்ற தொகுப்பு நோய்களால் அவதிப்பட்டு வந்த அய்யா வேலுப்பிள்ளையை தூக்கிச் செல்ல முயன்ற சகத் தமிழனின் உதவியை மறுத்து அவராகவே நடந்து சென்றார். பல முறை தடுக்கி கீழே விழுந்தும், மீண்டும் தானாகவே எழுந்து நடந்தார். ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்

.

தங்கள் மகனுக்கும் அதைத்தான் அவர்கள் போதித்தார்கள். மரணம் கண்ணுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருந்த போதும் அவர்கள் சலனமில்லாமல் தான் இருந்தார்கள். ஒரு நாட்டை ஆண்ட தலைவனின் பெற்றோர் என்ற முறைமையில் அவர்கள் எவ்வித சலுகையையும், அனுதாபத்தினையும் விரும்பாதவர்களாக இருந்தார்கள். அனைத்தையும் இழந்த அவர்களுக்கு வரலாற்றின் பாதையில் கடுமையாக பழி வாங்கப்பட்ட ஒரு இனத்தின் மக்களுக்காக தங்கள் மகன் நடத்திய அறவொழுக்குடன் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் தந்த பெருமிதம் அவர்களுக்கு இருந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முதல்வர் வீட்டு மூன்றாம் தலைமுறைப் பேரன் கூட அதிகார போதை தரும் திமிறினால் எளிய காவலாளியைத் துப்பாக்கியை காட்டி மிரட்டும் ஆணவத்தினை அவர்கள் அறிந்திருக்க வில்லை. எளிய வாழ்வினைத் தான் அவர்கள் வாழ்ந்தார்கள். மக்களோடு, மக்களாக வாழ்ந்தார்கள். ஏதேச்சதிகாரத்தோடு நாட்டை ஆர்பாட்டங்களாய் ஆண்ட அதிபர்கள் எல்லாம் எதிர்ப்பு பெருகினால் குடும்பத்தோடு விமானம் ஏறி பயந்து ஓடும் உலகத்தில்…முப்படை வைத்து உலகம் வியக்க வாழ்ந்த ஒரு தலைவனின் குடும்பம் இப்படித்தான் வாழ்ந்தது. இந்த பரந்துப்பட்ட உலகின் முன் எவ்விதமான வேண்டுகோளையும் அவர்கள் வைக்க வில்லை. கடைசிக்காலத்தில் மருத்துவ உதவி கேட்டு அம்மாவின் கைரேகை (?) பதித்து தமிழக முதல்வருக்கு வந்ததாக காட்டப்பட்ட கடிதம் கூட அம்மாவின் நினைவு தப்பிய பொழுதுகளில் தான் வந்தது. ஏனெனில்..அது அவர்களது மரபியல் குணம்.

.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் செட்டிக்குளம் முகாமில் கைது செய்யப்பட்ட அய்யா வேலுப்பிள்ளையும், அம்மா பார்வதியும் பலத்த பாதுகாப்பிற்கிடையே இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நேரடி கண்காணிப்பிற்கு உட்பட்ட சித்ரவதைகளுக்குப் பெயர் பெற்ற கொழும்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்றளவும் வெளியிடப்படாத அந்த கடுங்கொடுமைகளுக்கு உள்ளான அய்யா வேலுப்பிள்ளை கடந்த 2010 ஜனவரி மாதம் காலமானார். அவரது மறைவின் போதே அம்மாவிற்கு நினைவாற்றல் மிக குறைவாகவும், தன்னிலை வருவதும் போவதுமாக இருந்தது. மிகுந்த உடல் நலிவுற்ற அவரைச் சிங்கள பேரினவாத அரசு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது. அங்கு அக்கா வினோதினி அம்மாவினைக் கவனித்துக்கொண்டார்கள். மேற் சிகிச்சைக்காக இந்திய அரசின் உரிய விசா பெற்று சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்த போது விமானத்தில் இருந்து இறங்காமலேயே அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேட்டதற்கு ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதிலை அளித்தார்.மீண்டும் பல வித அலைகழிப்பிற்குப் பிறகு மீண்டும் இலங்கை சென்ற அவர் இறுதி வரை அங்கேயே இருந்து காலமானார்.இதன் நடுவே அம்மா பார்வதி கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று எழுதியதாகவும், அதை நன்கு பரிசீலித்த கருணாநிதி மத்தியில் ஆண்ட சோனியா அரசிடம் அனுமதிப் பெற்று,ஆதரவு பெற்று ‘யாரும் வந்து பார்க்க கூடாது, பேசக் கூடாது , அசையக் கூடாது, மூச்சு மட்டும் விடலாம்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளோடு சென்னை வர அனுமதி அளித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இங்கிருந்து போன மதியாதார் அழைப்பினை அம்மா பார்வதி அவர்கள் ஏற்கவே இல்லை. சிங்கள பேரினவாதத்தினை விட கேடு கெட்ட தாயக தமிழகத்தின் இழிவான நிலையை கண்ட அம்மா இந்த மண்ணில் கால் வைக்காமல் போய் விட்டார். ஏனெனில்.. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் தேசியத்தலைவர் பிரபாகரனை ஒரு தலைவராக, சமரசம் அடையா சமரனாக உருவாக்கியத்தில் அவரது தாய் பார்வதி அம்மாளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. வல்வெட்டி துறையில் வாழ்ந்த திருமேனியார் குடும்பத்து திருவிளக்காக பார்வதி அம்மாள் திகழ்ந்தார். இயல்பான ஒரு தாய்க்குள்ள அனைத்து விதமான சுயநலப்பற்றுகளும் அவருக்கும் உண்டு. தாமதமாக வந்தாலே தவித்துப் போகும் தாய்மை அவருக்குள்ளும் இருந்தது. வீட்டிற்குள் மாட்டப்பட்டிருந்த தன் மகன் இருந்த புகைப்படங்களைத் தன் மகனே எடுத்துச் சென்று பதுக்கிய போது அச்சப்பட்டார். போராட்ட வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் ஒரு சேர சந்தித்த அந்த தாய் கடுமையான அனுபவங்களின் வாயிலாய் சிரமப்பட்டார். ஆனால் தாய்நிலத்தின் மீதான அளவற்ற பற்று, சுதந்திர வாழ்வின் மீதான வேட்கை அனைத்தும் முழுமையாக உள்வாங்கிய ஒரு அதிமனிதனின் தாய் தன்னுடைய உணர்வுகளை ,தன்னுடைய பற்றுக்களை சுருக்கி , வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டிய பெரு வாழ்வு வாழ்வதற்காக மகனை அனுப்பி வைத்தார் .அதைத்தான் இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. ஏனெனில் .. அது அவர்களது மரபியல் குணம்.

.

நம் அம்மா பார்வதி அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக கூட இங்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உலகத்தின் மிக இழிவான மக்களாய் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது. அதையும் தாண்டி செய்த தவறுகளை மறைக்க கருணாநிதி அடித்த கடிதக் கூத்துக்கள் நம்மை இன்னமும் தலைக் குனிய வைக்கிறது . நம் இனத்திற்காக நாடு கட்டி போராடிய மகத்தான தலைவனின் தாயாருக்கு மருத்துவ உதவி கூட வழங்க மறுத்த கருணாநிதியின் துரோகமும், இது போன்ற காட்சிகளை வழக்கம் போல ‘நாளை மற்றொரு நாளே’ என்பது போல வேடிக்கைப்பார்த்த நமது கையாலாகாதத்தனமும் எதிர் வரும் தலைமுறைப்பிள்ளைகளால் எச்சிலால் உமிழப்படும். அம்மா இதையெல்லாம் புரிந்துக் கொண்டுதான் இறுதி காலத்தில் எங்கும் செல்லாமல் தன் சொந்த மண்ணில் எரிந்து தாய் நிலத்தின் உரமாக கலந்துப் போனார். அம்மாவினை எரித்த சிதையில் மறுநாள் நாய்களை வைத்தெரித்து உலகிற்கு மீண்டும் தன் மனநோயாளித்தனத்தினை அப்பட்டமாக வெளிகாட்டியிருக்கிறது சிங்கள பேரினவாதம் . ஈழ மக்களும், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளும் அசைவற்ற விழிகளுடன் உலகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். உலகமும் சிங்கள பேரினவாதத்தின் இது போன்ற இழிவான செயல்களை தான் வழக்கம் போல் காத்து வரும் மெளனத்தினால் அங்கீகரித்து இருக்கிறது. உலகத் தமிழர்கள் பெரும் துயரோடு அமைதி காக்கிறார்கள் . துயருடன் கலந்த அமைதி தான் புரட்சியின் கருவாக அமைகிறது என்பதை எகிப்து காட்டியிருக்கிறது . இழந்தவர்கள் பெறுவதற்கு சுதந்திரம் மட்டுமே இருக்கிறது. பெறுவார்கள். ஏனெனில்.. அது அவர்களின் மரபியல் குணம்.

.

துயர் கவிழ்ந்த பெரு நிலத்தினை , வெறித்துப் போன விழிகளை சுமக்கும் பசித்த வயிற்றினை, சொந்த ரத்த உறவின் நிர்வாணத்தினை, சொந்த தங்கையின் உடலின் மேல் வல்லுறவாய் நிகழும் பாலியல் தாக்குதலை , அவளின் ஈரக்குலையை அறுக்கும் போது எழும்பும் ஈனக்குரலை, எவ்வித சலனமுமில்லால் பார்த்து விட்டு, அடிப்படை குற்ற உணர்ச்சிக் கூட கொள்ளாமல் நம்மால் இந் நாட்களையும் கடக்க முடிகிறது. தேர்தல் குப்பைத் தொட்டிக்கு அருகே பதவி எச்சிலைக்காக சண்டையிட்டுக் கொள்ளும் தெரு நாய்களை நம்மால் எவ்வித சங்கடமும், அருவருப்பும் இல்லாமல் இயல்பாக பார்த்து விட முடிகிறது. இனத்தினை அழித்த ஓநாய் ஓட்டு பிச்சைக்காக வீட்டுக்கு வரும் போது அவன் விரல் நீட்டி தரும் காசை காற்சட்டைக்குள் போட்டுக் கொண்டு அவன் ஊற்றும் சாராயத்தினை சப்புக் கொட்டி குடிக்க முடிகிறது. இனத்தின் எதிரிகளை என்ன விலை கொடுத்தேனும் எப்படியாவது வீழ்த்த நினைக்க முயலாமல் அவமானத்தின் இழி பிறவிகளாய் தத்துவ குகைக்குள் இருட்டு சித்தாந்தம் பேசி, புள்ளி விபர புலம்பல்களோடு கொல்லைப் புறம் வழியாய் எதிரியின் எச்சிலைக்காக நியாயம் பேச முடிகிறது . இன்னமும் நம்பிக்கை இழக்காமல் எதிலும் முடங்கிப் போகாமல் தாங்க முடியாத துயரோடு, வீழ்ந்தவர்கள் சிந்திய உதிரத்தினை உடலிலே பூசிக் கொண்டு வன்மம் கொண்டு இனம் வெல்ல வீதியில் நிற்பவர்களை நயவஞ்சமாக புறம் பேசி சுகம் காண முடிகிறது.

சகிக்க முடியாத துயரொன்று உண்டெனில் – இவற்றை சகித்துக் கொண்டு வாழ்வதுதான்.

பார்வதி அம்மாவின் இழப்பும் அவ்வாறே.

உரமாய் கலந்தவையும்.. மாவீரர்களின் மூச்சுக்காற்றாய் அலைபவையும் முடங்கிப் போகாது. அழுத விழியோரத்தில் நம்பிக்கை என்ற சிவப்பினை ‘பிரபாகரன்’ என்ற சொல் தேக்கும். நாளை அந்த மண் மீண்டும் பூக்கும். ஏனெனில் அது அவர்களது மரபியல் குணம்.

எம் தாய்க்கு வீரவணக்கம் .

12/9/10

உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்


இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது. ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரீகமும்..அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து..தனி மனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான்.. என்று உணருங்கள்.

நிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைதான் இந்தியா உள்ளீட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

பேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண் குறியை நம் விழிகளில் உதிரம் மல்க பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது..? நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது..? நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்..? அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது..? அங்கே தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்க கிடக்கிறான்.

உலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரீக சமன்பாடுகளையும் சிங்கள பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது . உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளீட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண் மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்துக் கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெரு நிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்த வரையில் நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.

தங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதி வரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும்…அதன் எதிர் வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த..மக்களுக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான்… அடுக்கடுக்காக சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெரு நிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயல வில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

ஈழப் பெரு நிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெரு நிலம் மாற்றப்பட்டு விட்டது . ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன் துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக தான் பனிக் கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு . மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்கள பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளீட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்கள பேரினவாதம் உணர்ந்து நடுங்க துவங்கி இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்துக் காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன் வைத்து தன் மனித தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அற மனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்கள பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது . நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறிப்பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெரு வெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராட துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.

ஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மெளனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது . அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலக பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல . தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினை கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து..குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களை கண்டு விட்டப்பிறகும் சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..?

பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.

…அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல.

உயர்த்திய கரங்கள்

அழுத்தமாய் ஒலிக்கும் குரல்கள்

சங்கிலித் தொடராய்

இணைந்த கைகள்

அடக்குமுறையை எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள். “ ( -கோசின்ரா கவிதையிலிருந்து)

12/6/10

எங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்


அன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு.

போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல. அதிகாரங்கள் எழுச்சியின் குரல்களை தின்னும் பூமியில் உள்ள உங்கள் நலத்தை எப்படி விசாரிக்க.நாங்கள் எல்லோருமே கட்டுண்டு அகதிகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல கடந்த காலத்தில் எமதினம் அனுபவித்த துன்பத்தை எந்த இனமும் அனுபவிக்க மாட்டாது.

உங்களால் எங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இங்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணுபவை. அதற்கு இலங்கை அரசு பயம் கொள்ளுகின்றது. ஆனால் சீமான் அண்ணன் அவர்களே! இன்று ராஜபக்ஷ விரும்புவதை கருணாநிதி செய்து உங்களை சிறை வைத்திருக்கிறார். நீங்கள் விடுதலை பெற்று வரவேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். பொங்கிய தமிழகத்தையும் திரையுலகத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் , உலகத் தமிழர்களின் குரல்களை கண்டு அஞ்சாது யுத்தம் நடத்திய ராஜபக்ஷவும் ஒன்றுதான்.

நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தளவில் அதிகாரத்தால் எங்களை சிதைத்து வதைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. சிங்களக் குடியேற்றம், காணி நிலங்களை அபகரிப்பது, சிங்கள அரச கைக்கூலி அதிகாரிகை திணிப்பது, மீள்குடியேற்றத்தை பின்னடிப்பது என்று பல வகையில் மக்களுக்கு அவலத்தை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் எதைப் பற்றியும் பேச முடியாத சூழலை உருவாக்கி எங்கள் தாயகத்தை கனவை அழிக்கப் பார்க்கிறது.

நீங்கள் எப்பொழுது சிறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள் என்று அடிக்கடி நண்பர்களை விசாரிப்பதுண்டு. விடுதலையாக வேண்டும் என்று காத்திருக்கிற உணர்வுத் தமிழரர்களில் நானும் ஒருவன். திடமாக நம்புகிறேன் மீண்டும் அதிரும் உங்கள் குரல் எமக்காய் ஒலிக்குமென்று.

பேரறிவாளனது “தமிழ்முழக்கத்தில்“ வெளியான பதிவை படித்த பொழுது மிகவும் துக்கமாக இருந்தது. புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஈழப் போராளியின் முகம் என்று நினைத்தேன். அன்பான பேரறிவாளன் விடுதலை பெற்று வர தொரடர்ந்து போராடுங்கள். உங்கள் விடுதலைக்காக நாம் காத்திருக்கிறோம். “அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” காசி ஆனந்தனின் வரிகள் சொல்லுவதைப் போல அதிகார விதியினால் உங்களை சிறை வைத்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் போராடுங்கள் பேரறிவாளன்.

முருகன் “குப்பி“ திரைப்படம் பார்த்த பொழுதுதான் எனக்கு அந்த நாட்கள் மேலும் மனதை நெருக்கின. அந்தப் படம் பிழைத்து வி்ட்டதாக சொன்னார்கள். சகோதரி நளினி அத்தோடு உங்கள் வாழ்க்கை இப்படி கழிந்து விட்டது. எங்களுக்காக எங்கள் விடிவிற்காக இப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. நீங்கள் சிறையிலிருந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், ஓவியம் வரைகிறீர்கள் என்றெல்லாம் எங்கள் தினசரிப் பத்திரிகைகளில் செய்திகள் வரும். உங்களுக்கு இந்தா விடுலை அந்தா விடுதலை என்றும் செய்திகளும் படங்களும் வரும்.

உங்கள் பிள்ளையின் ஓவியம் என்று நினைக்கிறன் எங்கள் தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்திருந்தது. உங்களது விடுதலை சாத்தியமாக வேண்டும் என்று காத்திருக்கின்றோம். அமீர் சொல்லிய பேட்டியில் ‘நாங்கள் சிறையில் இருப்பதைப்போலவும் நீங்கள் வெளியில் இருப்பதைப்போலவும்’ உணருக்கிறன். நம்பிக்கையுடன் விடுதலைக்காக போராடுங்கள். அந்த நாள் தமிழர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க மனம் ஏதோ செய்கிறது.

உங்கள் அருகில் சீமான் இருக்கிறார். அவரை பத்திரமாக பாத்துக் கொள்ளுங்கள். எங்கள் இனத்திற்கு அவரது குரல் வேண்டும். நீங்கள் வேண்டும். உங்களை அவர் பார்த்துக் கொள்ளுவார்.ஏதோ ஒரு நம்பிக்கையில் இருக்கிறது எங்கள் நிலம். ஆபத்தும் அழிவும் அதை சூழ்கிறது. முடியுமானவரை நமது உரிமைக்காக வேலை செய்வோம். ஒரு காலத்தில் நாங்கள் சந்திப்போம் அண்ணன்களே.முடிக்க முடியாத துயருடன் என் கடிதத்தை முடித்துக் கொள்கிறன்.

மிக்க அன்போடு தம்பி தீபச்செல்வன்